"இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?" என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை
அடால்ஃப் ஹிட்லர்
பேசப் பேசத் தீராத அசாதரண வாழ்க்கை. எந்த கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர் கால தலைமுறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி-ஹிட்லர்.
சாமானியன் ஒருவன், தேச மக்களின் ஆதரவை, நம்பிக்கையைப் பெற்று, நாஜி என்ற மதத்தை வளர்த்து, தன்னை கடவுளாக வழிபடும் ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்கி, ஜெர்மனி என்ற மாபெரும் தேசத்தின் தலைவிதியைத் தன் சுண்டு விரலால் எழுதும் வலிமை கொண்ட சர்வாதிகாரியாக சிம்மாசனத்தில் அமர்வது சாதாரண விஷயமில்லை. எனில், அப்போதைய ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை இருந்திருக்கிறது. சர்வ வல்லமை கொண்ட ஒரு மீட்பர் வர மாட்டாரா என்று ஜெர்மானியர்களுக்கு ஏக்கமும் இருந்திருக்கிறது.வளமிக்கக் குடும்பத்தில், பலமானவனாகப் பிறந்தவன் அல்ல ஹிட்லர். தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இறை பக்த்தியுடன் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு வளர்ந்த சாதாரணச் சிறுவன்தான். படிப்பிலும் கெட்டி அல்ல. தலைசிறந்த ஓவியனாக உருவாக வேண்டும் என்ற மென்மையான இலட்சியத்துடன் வளர்ந்த இயல்பான இளைஞனே. ஆனால், ஒரு கட்டத்தில் தூரிகையைத் தூக்கிக் கடாசிவிட்டு, துப்பாக்கியை நம்பி, ரத்தம் தொட்டு குரூரங்களைக் காட்சிப்படுத்தும் கொடுங்கோலனாக மாறியிருக்கிறான் எனில் அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம், முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்தது. ஜெர்மனி தோற்றது. "அனைத்திற்கும் காரணம் ஜெர்மனி" கூறின சர்வதேச உத்தமர்கள்.அடுத்தது என்ன, சுதந்திரமான நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேச சங்கம் (League of Nations) பிறந்தது.உறுவாக்கினார்கள் வெர்செயில்ஸ் ஒப்பந்தத்தை...
ஜெர்மனி தானே குற்றவாளி என்று ஒப்புக்கொள்ளும் படியாக, ஜெர்மனியே அழிந்து போகும் படியாக, அதன் மண்ணாசையை ஒடுக்கும் வகையில், ஜெர்மனியால் ஏற்பட்ட நஷ்டங்களைச் சரி செய்யும் வகையிலான அருமையான ஒப்பந்தம்.
அடேய் ஜெர்மனி வாயை மூடிக் கொண்டு வந்து, கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு போ! - பேரன்புடன் சொன்னது சர்வதேச சங்கம். கையெழுத்திட்டு அகலபாதாளத்தில் விழுந்தது ஜெர்மனி.
உலகால் ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கப்பட்ட ஜெர்மனி, இந்த உலகையே பழிவாங்கும் காலம் ஒன்று வராதா? ஜெர்மனியனின் வலிமையைக் கண்டு இந்த உலகையே நடுநடுங்க வைக்கும் தலைவன் ஒருவன் வரமாட்டானா?
படிப்பதற்கு சினிமா டயலொக் போல இருக்கலாம். ஆனால், அன்றைக்கு ஒவ்வொரு ஜெர்மானியனும் உள்ளக் குமுறலுடன்தான் உயிர் வாழ்ந்தான். அவர்களுடைய பிரதிநிதிகளுள் ஒருவராக, அந்த பழிவாங்கும் உணர்வின் ஒட்டுமொத்த உருவமாக வந்தார்-அடால்ஃப் ஹிட்லர்.

No comments:
Post a Comment